விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
உலகத்தின் முதல்வன்!
உருவத்தில் பெரியோன்!
பலப்பல உருவில்
அருளிடும் அரியோன்;
வலிகளைப் போக்கிடும்
வலிமை உடையோன்!
கலிகாலக் கடுமை
கடிந்திடும் கரியோன்!
1
வீடணனை மடக்கிக் காவிரிக் கரைதனில்
விஷ்ணுவை நிலையாய்க் கோவில் கொள்ளச் செய்தான்
கோபம் கொண்ட
வீடணன் துரத்தி வரவே
ஓடோடிச்சென்று
உச்சிமலை அமர்ந்தான்!
2
உச்சிமலை மீதில்
உவந்தே அமர்ந்தான்,
இச்சைகளை இயக்கும்
இமையோன் மைந்தன்!
பச்சரிசி பிட்டு நயக்கும் விநாயகன்,
எச்சமெல்லாம் களைவான் எங்களின் தலைவன். 3
காலத்தை வென்றோன்! ஞாலத்தில் சிறந்தோன்!
காலனும் பணியும் கற்பக விநாயகன்!
சீரும்,
பேரும், சிறப்பும் நல்கும்
சீலம் மிகுந்தோன்! செல்வ விநாயகன்!
4
மாங்கனி பெறவே அம்மை அப்பனை
மாறாமல் வலம் வந்தான்; முருகனை வென்றான்!
மருகிக் கோபம் கொண்ட தம்பியை
மார்புடன் அணைத்து மாங்கனி கொடுத்தான்! 5
மூஷிகன் கர்வம் அதனை அடக்கி
மூஞ்சுறு வாகனம் ஆக அதைக் கொண்டான்!
பாரதம் எழுத தந்தம் முறித்தான்!
பாரதைக் காக்க எங்கும் உறைந்தான்! 6
நாவல் கனியை நயக்கும் நாயகன்;
நாவாரப் பாடினால் நர்த்தனம் ஆடுவான்!
நாகம் அதனையும் இடையணி ஆக்கினான்!
நாதத்தின் முதல்வன்! வேதத்தின் தலைவன்! 7
வெள்ளெறுக்கு வேரில் உவந்தே உறைவான்!
வெள்ளெறுக்கம் பூவை விரும்பியே அணிவான்!
வெள்ளேறு ஏறும் சிவனவன் மைந்தன்
வெள்ளம்போல் வேண்டியதை அளித்தே
மகிழ்வான்! 8
அருகம்புல் மாலை அணியும் அழகன்!
அரச மரத்தடி அமரும் வேந்தன்!
பெருகும் தீவினை களையும் பெரியோன்;
மருகும் மனத்தை மாற்றும் மறையோன்! 9
மாயையை அகற்றும் மாணிக்க விநாயகன்!
தேவையை நல்கும் தீர்த்த விநாயகன்!
சேயைப்போல்
சிரிக்கும் செல்வ விநாயகன்!
தாயைப்போல்
காக்கும் தலைவன் விநாயகன்!
10
திருச்சிற்றம்பலம்!
No comments:
Post a Comment