வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
அன்பானவர்களுக்கு வணக்கங்கள் !
தெனமும் வீட்டுல கொண்டாந்து கீரைவிக்கிர அந்த அம்மா போனவாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்ன்னு பத்திரிக்கை குடுத்துட்டுப்போச்சு. தெனம் காலையில கூடையில கீரக்கட்டு முருங்கக்கா வாழக்கா மாத்திரம் கொண்டாரும். கீரக்கட்டு 25 ரூ முருங்கக்கா கட்டு 25 ரூ வாழக்கா 3 , 25 ரூவான்னு குடுக்கும்
பழைய லேசா கிழிஞ்ச சேலை கட்டிருக்கும் அள்ளி முடிஞ்ச தலை. எண்ண பாக்காத முடின்னு பாக்கவே கஷ்ட்டமா இருக்கும்.
கீரக்கட்டோட பத்திரிக்க குடுக்கக்கூடாதுன்னு தனியா வந்து குடுத்துட்டுப்போச்சு. இதுமாதிரி பத்திரிக்கைகளைக் கண்டுக்கிறது இல்ல. அதுனால வாங்கி வைச்சதோட சரி மறந்தாச்சு.
ஆனா கலியாணத்துக்கு மூணு நாளைக்கி முன்னாடி வந்து "அம்மா அஞ்சு நாளைக்கி நான் வரமாட்டேன் கலியாண வேலை இருக்கு" ன்னு சொல்லிட்டுப் போச்சு.
நான் "ஏதாவது பணத்த கவர்ல போட்டுக்குடுத்து அனுப்பு. இதுக்கெல்லாம் போகமுடியாது அன்னிக்கி எங்க ஆபீசுல என்னோட பாஸ் மகளுக்குக் கலியாணம் அங்க போகனும் அவர் கண்டிப்பா வரனும்ன்னு சொல்லிருக்காரு" ன்னு சொன்னேன்.
அதுக்கு என்னோட சம்சாரம் கேட்டா " நீங்க மொத நா ரிசப்ஷன் தானே போவீங்க.. மறுநாள் ஞாயத்துக்கெழமதான்.. பக்கத்துக் கிராமத்துல அவங்க வீட்டுலதான் கலியாணம். "போய்த் தலையக் காட்டிட்டு வரலாம்ன்"னு சொன்னா.
அதுக்கு அவ சொன்ன காரணம் "அந்தம்மா கிட்டத்தட்ட பத்துவருசமா கீரை குடுக்குது.. நல்ல பழக்கம்"ன்னா. மேலிடத்தின் பேச்சை மீற முடியுமோ... சரின்னு ஒத்துக்கிட்டேன்.
வழக்கம் போல ஆபீஸ்ல வேலைசெய்யிற வங்களோட ஒன்னா வேன் புடிச்சி பாஸ் வீட்டுக் கலியாணத்துக்குப் போனோம்.
அங்க சரியான கூட்டம். பாஸ் மாப்பிள்ள வீட்டு ஆளுகளை கவனிக்கிறதுல பிசியா இருந்தாரு.
வரிசையில நின்னுட்டு இருக்கும் போதே குறுக்க குறுக்க மாப்பிள்ள வீட்டு ஆளுங்கன்னு கும்பல் கும்பலாப் போய்ட்டு இருந்ததால லேட்டாகி.. ஒருவழியா கை குடுத்துட்டு இருக்குறப்ப யாரோ வர.. எங்களை அம்போன்னு விட்டுட்டு பாஸ் அவர்கிட்ட ஓடினாரு.
நாங்க ஃபார்மாலிட்டிக்கு நின்னு போட்டோ எடுத்துட்டு சாப்பிடப்போய்.. அங்க எடம்புடிச்சி சாப்பிட்டுட்டு.. வீடு வாரதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு.
மறுநாள் காலையிலதான் கீரக்காரம்மா வீட்டுக்கலியாணம். சம்சாரம் பட்டுசேலை ரெண்டு இஞ்ச் பார்டர் போட்டது கட்டிக்கிட்டு கொஞ்சமா நகை போட்டுக்கிட்டுக் கெளம்புனா.
கார் எடுத்துக்கலாமான்னு கேட்டப்ப " வேணாம் . நாம ரொம்ப பகட்டா அங்க போகப்படாது.. அவங்களே சுமாராத்தான் இருப்பாங்க.. அளவோட இருக்குறது தான் நல்லது. நம்மமேல கண்ணு பட்டுடும்"ன்னு சொன்னா.
அப்பீல் கெடையாது .
நானும் பைக் எடுத்துட்டுக் கெளம்புனேன். கவருல 201 போட்டு சீல் பண்ணி எடுத்துட்டுப் "போதும் அவங்களுக்கு இதுவே பெருசு"ன்ற எண்ணத்துல போனோம்.
அந்த ஊரு மெயின் ரோட்டுல இருந்து உள்ளாற மூணு நாலு கிலோ மீட்டர் இருக்கும். மெயின் ரோட்டில இருந்து தோரணம் கட்டிருந்துச்சு. வேற எதுவும் விசேஷம் போலன்னு நெனச்சிக்கிட்டேன். போகப்போகத் தான் தெரிஞ்சது இதெல்லாம் அந்தக் கீரக்காரம்மா வீட்டுக் கலியாணத்துக்காகத் தான்னு..
ஊரு பூரா வாழ்த்துப் போஸ்ட்டர் அடிச்சி ஒட்டிருந்துச்சு. போகப்போக வரிசையா விலை உயர்ந்த காருக நின்னுச்சு. எல்லாம் கலியாணத்துக்கு வந்தது போல.
கலியாணம் நடக்குற வீடுன்னு சொன்னா அடிச்சிப்புடுவாங்க.. அவ்வளவு பெரிய பங்களா. தெருவே அடைச்சிப்பந்தல் எக்கசக்கக்கூட்டம். ஒரே பட்டுச்சேலை பெண்கள் . அவங்களோட கம்பேர் பண்ணிப்பாத்தா நாங்க ரொம்ப சுமார்.
உள்ளாற விடுவாங்களோன்ற மாதிரி எனக்கே கூச்சமாப்போச்சு. வெளிய தயக்கத்தோட நின்னப்ப கீரக்காரம்மா தச்செயலா வெளிய வந்துச்சு. இவங்களைப்பத்துட்டு நேர இவங்க கிட்ட வந்து "வாங்கய்யா"ன்னு கூப்டுட்டுப் போச்சு.
எனக்கு அடையாளமே தெரியல. அரையடி பாடர் பட்டுச்சேலை. கை கழுத்து பூரா நகைகள்.
பெரிய ஜமீன் தாரம்மா மாதிரி ஜொலிச்சிச்சி. உள்ளார கூட்டிட்டுப் போய் எல்லா பட்டுச்சேலைக்காரங்களையும் ஒதுக்கி விட்டுட்டு மணமக்களை கூப்புட்டு கால்ல விழுகச் சொல்லிச்சி.
"அய்யா ஒங்களப் போலப் படிச்ச பெரியவுக ஆசீர்வாதம் பண்ணனும்"ன்னு சொல்லிச்சி. நாங்க ஆசீர்வாதம் பண்ணுனோம். கொண்டு போயிருந்த 200 ரூவா கவர் கூசிச்சு. எப்புடிக் குடுக்குறதுன்னு யோசனை வந்துச்சு. வேற வழியில்லாம குடுத்துட்டு.. திரும்புனவன "வாங்கய்யா"ன்னு கூட்டிட்டுப் போய்த் தனியா டேபிள் ஒதுக்கி.. பக்கத்துல நின்னு சாப்பாடு பரிமாறி.. சாப்புட வச்சி கெளம்பும் போது தாம்பூலப்பைன்னு ஒண்ணு குடுத்துச்சு.
" ரொம்ப சந்தோசமுய்யா.. நீங்க வந்துதுல"ன்னு நெறஞ்ச சந்தோசத்தோட வழி அனுப்புச்சுச்சு.
வீட்டுல வந்து தாம்பூலப் பையப் பிரிச்சா அதுக்குள்ள வெள்ளில சிமிழ்கள் ரெண்டு இருந்துச்சு.
எனக்கு ஒருமாதிரி ஆகிப்போச்சு. இது புரியவே இல்ல. அப்பத்தான் அவங்க குடுத்த கலியாணப் பத்திரிக்கையப் பிரிச்சி படிச்சா அதிர்ந்து போனேன்.
அந்த ஊருல பெரிய வெவசாயக் குடும்பம் அது. மகன் பேருக்கு நேர M.Sc (Agriculture) ன்னும் பொண்ணு பேருக்கு நேரயும் M.Sc (Agriculture)ன்னும் போட்டிருந்துச்சு. சொந்தக்காரங்க எல்லாம் பெரிய படிப்பு.. பதவில இருக்குறதும் தெரிஞ்சது,
அடுத்தவாரம் ஞாயத்துக்கெழம.. அதே கீரக்காரம்மா பழையபடி கீரைக் கூடையோட வந்துருச்சு.
என்னால ஆவல அடக்கமுடியல இத விசாரிக்கணூன்னு தோணிச்சு .
அவங்களை வீட்டுக்குள்ளக் கூப்புட்டு ஒக்காரவைச்சி மரியாதையோட விசாரிச்சப்ப அந்த அம்மா சொல்லிச்சி.
" உங்களுக்குச் சந்தேகம் வந்தது ஞாயம்தான். நாங்க அந்த ஊருல வெவசாயக் குடும்பம். அஞ்சு ஏக்கரு கீரை பயிரிட்டு இருக்குறோம் மகன் தான் படிச்சிட்டு வெவசாயத்துக்கு ஒதவி பண்ணுறான். அந்த விவசாயக்கல்லூரிலதான் வேலைபாக்குறான். பொண்ணும் அதேகல்லூரிதான். அவளுக்கும் வெவசாய்த்துல ஆர்வம் அதுனாலதான் காதல் கலியாணம். முறையா வெவசாயம் செஞ்சி தரகர் இல்லாம நாங்களே வியாபாரமும் பண்ணுறோம்.
காலையில வேன்ல கொண்டாந்து எறக்கி தனித்தனியா கூடையில சொமந்து விக்கிறோம் . நான் ஆர்வத்தோட நடந்து விக்கிறதால ஒடம்பும் நல்லாருக்கு. லாபமும் கெடைக்கிதுன்னு சொல்லிச்சி.
தோற்றத்தப் பத்திக் கேட்டேன். "ஏன் அங்க ராணிமாதிரி இருந்த நீங்க இங்க கீரை விக்கிறப்ப இப்புடி..."ன்னு கேட்டேன்
அதுக்கு சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சி "கீர விக்கிறப்ப பட்டுச்சேலையும் நகைநட்டோட வந்தா நல்லாருக்குமா ? ஆராவது வாங்குவாகளா?ன்னு.
அப்ப தோணுச்சு.. சும்மா 40ஆயிரம் மாசச் சம்பளம் வாங்குற நாம என்னா அலட்டு அலட்டுறோம்னு ? அத நெனைக்கிறப்ப வெக்கமா இருந்துச்சு.
அந்த விவசாயத் தாயக் கையெடுத்துக் கும்புடத் தோணிச்சி.
*உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்* என்ற அய்யன் குறள் நெனவுக்கு வந்துச்சு.
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்.
மேலே உள்ளது எங்கள் நண்பர் எனக்கு whatsappல் அனுப்பியது.
ஒரு பழைய பாட்டு ஞாபகம் எனக்கு வருகிறது..
" ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து
ஆசை வைக்காதே..
ஆரவார நடையைப் பார்த்து மயக்கம் கொள்ளாதே.."
எங்கள் நண்பர் ஒருவர் இயல்பிலேயே கோடீஸ்வரன்.. அவருடைய அப்பா ஊர்த் தலக்கட்டாக இருந்தவர். அந்த நண்பர் இன்று எங்கள் மாவட்டத்தில் ஒரு புள்ளி..
EDP (Entrepreneur Development Program) பல கல்லூரிகளில் எடுப்பவர். சிறுகுறு தொழில் மையத்தில்...மாவட்டத் தொழில் மையத்தில்..மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் என்று பல விதங்களில் பொறுப்பில் உள்ளவர்.
எப்போதும் ஒரு ஸ்கூட்டரில் தான் வருவார். மனைவியுடன் வந்தாலும் அப்படித்தான்.
இவர்களைப் போல் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
திரு. ஜெகன்னாதன்.. திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் - இருவரும் சமூக சேவகர்கள்..
திரு.ஜெகன்னாதன் தமிழக சர்வோதயாவில் ஒரு முக்கியமான மனிதர்.
https://www.rediff.com/news/2008/oct/01award.htm
இந்த லின்க்கைத் தயவுசெய்து அனைவரும் பாருங்கள். விவசாயக்கூலி மக்களுக்காகப் போராடி எத்தனை எத்தனையோ கிராமங்களில் அந்தப் பிரிவின மக்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தொண்டாற்றியவர்கள்.
நானும் என் கணவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ஒரு நல்ல தொண்டு நிறுவனத்திற்குச் சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர். பூமிதான இயக்கத்தில் இருந்து எங்கள் நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட இரண்டேகால் ஏக்கர் நன்கொடையாகப் பெற்றுத் தந்தவர்கள்.
அந்த அம்மா நேரில் பார்த்தால் விவசாயக்கூலி செய்யும் பெண் போல இருப்பார்கள்.
மிகமிக மிகமிக எளிமையான ஆத்மாக்கள்.
திருமதி.கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு 2008ல் Alternate Nobel பரிசு தேடி வந்தது.
சென்ற வருடம் பத்மபூஷன் விருது இவரைத் தேடி வந்து தன்னைக் கௌரவப்படுத்திக் கொண்டது.
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இவர்களைப் போன்ற மாமனிதர்கள் மறக்க முடியாத.. மறக்கக் கூடாத சமூகப் போராளிகள் !
அவர்கள் பாதங்களில் பணிகிறேன்!
வாழிய பாரத மணித்திருநாடு !