Monday, 29 July 2024

சிவபெருமானுக்கு உரிய எட்டு விரதங்கள் :

1‌. சோமவார விரதம் அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்.

அதிலும் குறிப்பாக கார்த்திகை சோமவார விரதம் மிகவும் விசேஷம்  .

2 . மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை விரதம். ஆருத்ரா தரிசனம் என்றும் இதைச் சொல்வார்கள். நடராஜப் பெருமானுக்கு உகந்த விரதம் .

3. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி : மஹா சிவராத்திரி விரதம்.‌

பாரதம் முழுவதும் அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் மிகவும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படும் இந்த நன்னாளில் மாலை முதல் தொடங்கி 4 கால பூஜைகள் நடைபெறும் .

4. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று உமா மஹேஸ்வர விரதம் . அம்பிகை தவமிருந்து ஐயனின் பாகம் இடது பெற்ற நாள்.

5. பங்குனி உத்திரம் - திருக்கல்யாண விரதம் ஒரு உற்சவமாகவே கொண்டாடப்படுகிறது.

6. தைப்பூசம் - பாசுபத விரதம்.

7. ஐப்பசி அமாவாசை அதாவது தீபாவளி அன்று கேதார கௌரி விரதம். 

8. வைகாசி பூர்வபட்ச அஷ்டமி விரதம்.


Friday, 26 July 2024

விநாயகரின் 32 வடிவங்கள்


விநாயகரின் 32 வடிவங்கள்: 

1. பால கணபதி, 

2. தருண கணபதி, 

3. பக்தி கணபதி, 

4. வீர கணபதி, 

5. சக்தி கணபதி, 

6. துவிஜ கணபதி, 

7. சித்தி கணபதி, 

8. உச்சிஷ்ட கணபதி, 

9. விக்ன கணபதி, 

10. க்ஷிப்ர கணபதி, 

11. ஹேரம்ப கணபதி, 

12. லட்சுமி கணபதி, 

13. மகா கணபதி, 

14. விஜய கணபதி, 

15. நிருத்த கணபதி, 

16. ஊர்த்துவ கணபதி, 

17. ஏகாட்சர கணபதி, 

18. வர கணபதி, 

19. த்ரயக்ஷர கணபதி, 

20. க்ஷிப்ரப்ரசாத கணபதி, 

21. ஹரித்ரா கணபதி, 

22. ஏகதந்த கணபதி, 

23. சிருஷ்டி கணபதி, 

24. உத்தண்ட கணபதி, 

25. ருணமோசன கணபதி, 

26. துண்டி கணபதி, 

27. துவிமுக கணபதி, 

28. மும்முக கணபதி, 

29. சிங்க கணபதி, 

30. யோக கணபதி, 

31. துர்க்கா கணபதி, 

32. சங்கடஹர கணபதி.

Saturday, 6 July 2024

108 என்ற எண்ணின் சிறப்புகள்

108ன் சிறப்பு தெரியுமா?


படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். 


பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம்.


வேத காலத்தில் ஜோதிடம் என்பது ஒரு முழுமையான அறிவியலாக இருந்து வந்துள்ளது. அரசர்களுக்கு வழி காட்டுபவர்களாக ஜோதிடர்கள் இருந்துள்ளனர்.

அதோடு தனிமனித வாழ்வில் திருமணம் செய்யும் முன்பு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது வழக்கமாக இருந்துள்ளது. 


வேத ஜோதிடத்தில் 9 கிரகங்கள் 12 வீடுகளைக் கடப்பதை அடிப்படையாகக் கொண்டு தனிமனித கர்மாக்கள் கணிக்கப்பட்டன. 

9*12=108

இன்றும் அது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


அதோடு 27 நட்சத்திரக் கூட்டங்கள் (Constellations) 4 திசைகளில் இருப்பதும் கணக்கில் கொள்ளப்பட்டது. 27*4=108.


வேதங்களுக்கு விளக்கம் தரும் 108 உபநிடதங்கள் வேத கால நம்பிக்கையை நன்கு விளக்குகின்றன.

இந்த 108 எண்ணின் தன்மையும் மேன்மையும் நமது ரிஷிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.


நவீன கணிதவியல் உருவாவதற்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது வேத காலத்திலேயே நமது முன்னோர்கள் வானவியல் கணிதத்தில் பலப்பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

கிரகங்கள்.. நட்சத்திரங்கள் வானத்தில் உள்ள அனைத்தையும் அவர்கள் ஆராய்ந்து தெளிவான முடிவுகளுக்கு வந்துள்ளனர்.


நமது வானவியல் வல்லுநர் வணக்கத்துக்குரிய திரு. வராக மிகிரர் இந்த 108 ன் மேன்மையை அப்போதே தெளிவாக ஆராய்ந்து தனது புத்தகங்களில் எழுதியுள்ளார்.


கலிலியோ “கணக்கு என்ற மொழியைக் கொண்டு தான் கடவுள் அண்டத்தைப் படைத்துள்ளார்.. 108 என்ற எண் இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது”  என்கிறார்.


பூமியின் விட்டத்தைப் போல் 108 மடங்கு அதிக விட்டம் கொண்டது சூரியன்.

அதேபோல் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.


பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமும் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.

இவைகளே முழு சூரிய கிரகணம் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர் வானியலாளர்கள்.


ஆன்மீகத்தைப் பொறுத்தவரை..


பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பது போல வைணவ திவ்ய க்ஷேத்திரங்கள் 108.


இந்து தர்ம நம்பிக்கையின் படி Gokarnaவுக்கும்‌ கன்யாகுமரிக்கும் இடையில் உள்ள இப்போதைய கேரளா பகுதி மஹா விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமரால் அவருடைய கோடாரியால் தூர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.


கார்த்தவீர்ய அர்ஜுனா மற்றும் மற்ற க்ஷத்திரியர்களைக் கொன்று விட்டு அந்த நிலத்தை 64 கிராமங்களாகப் பிரித்து பிராமணர்களுக்குத் தானமாக அளிக்கிறார்.

இந்த கிராமங்களில் 108 மஹா சிவ லிங்கங்களும்..‌ துர்காதேவி சிலைகளும் வழிபாட்டுக்காக  நிறுவப்பட்டன.

இந்த 108ல்..105 கோவில்கள் கேரளாவிலும்.. 2 கர்நாடகாவிலும்.. 1 தமிழகத்தில் கன்யாகுமரியிலும் உள்ளன.

இந்த விவரங்கள் மலையாள மொழியில் எழுதப்பட்ட சிவாலா ஸ்தோத்திரம் என்ற பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன.


பல இந்துக் கோவில்களின் கட்டுமானத்திலும் இந்த 108 என்ற எண் தொடர்புடையதாக இருக்கிறது.


முக்திநாத் க்ஷேத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.


உத்தராகண்டில் ஜகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.


நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108.


அர்ச்சனையில் 108 நாமங்கள் (Ashtothram)


108 மணிகள் (beads)அல்லது உருத்திராட்சம் கொண்டவை ஜபமாலைகள் .


சீக்கிய குருமார்களும் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்களாம்.


அரச மரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.


ஓர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே‌ எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.


நமது இந்து தர்மம் மட்டுமல்ல உலகின் பிற நாடுகளின் மத நம்பிக்கைகள் சிலவற்றிலும் இந்த 108 என்ற எண் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.


எடுத்துக்காட்டாக..


தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.


திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108.


ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.


மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.


மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.


குங்ஃபூ கலையை உருவாக்கிய General Yue Fei  உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் - Locking Hand Techniques -  இருப்பதாகக் கூறியது இன்றுவரை பின்பற்றப் படுகிறது.


உடலில் 108 வர்ம அல்லது மர்ம ஸ்தானங்கள் உள்ளன என வர்மக்கலை கூறுகிறது.


108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.


அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் : பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் என்பார்கள்.

பஞ்ச பூதங்களால் ஆனது நமது உடல்… (Physical body) : மனம் அதன் எண்ணங்கள் (Subtle body) இவை கண்ணுக்குத் தெரியாத நுட்பமான தாக்கங்களை நமக்கு ஏற்படுத்துகின்றன.

இந்த உடலும் மனமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையன . அதாவது ஒன்றில் ஏற்படும் மாறுதல் மற்றதைப் பாதிக்கிறது அல்லது வலுவாக்குகிறது.


மன ஓட்டங்களைச் சீர் செய்ய தியானம் உதவுகிறது.. அதன் நல்ல விளைவு உடலைச் சீராக்குகிறது.

அதேபோல் உடலில் ஏற்படும் நல்ல மாற்றம் மன நிலையை மேன்மைப் படுத்தி விடுகிறது.

இந்த நிகழ்வுகளுக்கு 108 என்ற எண் பெரிதும் உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.


அதேபோல் சூர்ய நமஸ்காரம் என்பது 12 நிலைகளில் 9 முறை செய்யப்படுவது. ஆக 12*9 = 108 நிலைகள் (poses).


நமது இந்து தர்ம நம்பிக்கையின் படி தலை உச்சியிலிருந்து தண்டுவட அடிப்பாகம் வரை 7 சக்கரங்கள் உள்ளன : 

இதில் நெஞ்சுப் பகுதியின் நடுவில் அமைந்திருக்கும் இருதய சக்கரம் முழுமையான அன்பை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. 

அந்தச் சக்கரத்தைத் தியானத்தின் மூலம் ஒருவர் திறந்து விட்டால் மன்னிக்கும் மனப்பான்மை.. மரியாதை.. இரக்கம் இவை மூலம் ஒருவரிடம் நல்ல இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள்.

இந்த இருதய சக்கரமானது 108 energy lineகள் குவியும் இடமாகக் கருதப்படுகிறது.


நமது ஆயுர்வேத மருத்துவம் நமது உடலில் 108 மர்ம அல்லது இரகசியப் புள்ளிகள் உள்ளன.. அவற்றில் தசைநார்கள்.. சதைகள் மற்றும் நரம்புகள் ஒன்றிணைகின்றன என்று கூறுகிறது. 

இந்தப் புள்ளிகள் உடலின் சீரான இயக்கம் நடைபெற உதவுகிறது : இவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு (imbalance)‌ உடலில் சீரான சக்தி ஓட்டம் (energy flow) பாய்வதைத் தடுக்கிறது என்கிறார்கள்.


மொத்தத்தில் யோகாவில் கற்பிக்கப்படும் ஆசனங்கள் :  மந்திர உச்சாடனங்கள் (chanting) : மூச்சுப்பயிற்சி மற்றும் இந்து தர்ம நூல்கள்  - அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் முறையான சக்தியை (balance in energy) ஒருங்கிணைத்து அதன் மூலம் உயரிய ஆன்ம நிலையை அடைய போதிக்கின்றன.. உதவுகின்றன. 

அதற்கு இந்த 108 என்ற எண் மிகவும் உதவுகிறது.

ஏனெனில் ஒவ்வொரு தனி மனிதனும் தனித்துவம் கொண்டவன். “ அவனுக்கு 108 ஆசைகள்” என்று கிராமங்களில் சொல்வார்கள்.


UNO எனப்படும் சீட்டு விளையாட்டில் 108 கார்டுகள்.

Canasta எனப்படும் பாரம்பரிய சீட்டு விளையாட்டிலும் 108 கார்டுகள் தான்.


1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் : 0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும் : 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.


இப்படி 108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

Tuesday, 2 July 2024

பெங்களூருவில் பூத்த பிரம்ம கமலம் !

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் ஒரு அபூர்வமான பூவப்பத்தி இந்தப் பதிவுல பாக்கலாம் வாங்க.

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி என்று பாடினான் பாரதி ! நட்சத்திரங்கள் மட்டுமா ? இதோ நானும் அப்படித்தான் என்கிறது பிரம்ம கமலம் என்றும் நிஷகாந்தி என்றும் அழைக்கப்படும் இந்த அபூர்வ மலர் !
இந்த மலரின் தாவரவியல் பெயர் (botanical name) Epiphyllum oxypetalum ஆகும் .
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே June மாத இறுதியில் (அந்த மாத பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் என்றும் சிலர் சொல்கின்றனர் ) இரவில் மட்டுமே மலரக்கூடிய அபூர்வ வகை மலரான இது சில மணி நேரங்களில் குவிந்து வாடி விடுகிறது.
இது கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி என்பதால் இலையை நட்டு வைத்தாலே‌ செடி உண்டாகி விடுகிறது.‌ தண்டையும் நட்டு வளர்க்கலாம்.
இலையின் பக்கவாட்டில் சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புதுஇலைகள் உருவாகும். 
அதன் கணுக்களில் புதிய மொட்டுகள் உருவாகி மலர்களாய் மலரும் என்று சொல்கிறார்கள் தாவரவியலாளர்கள்.
கடந்த 28.06.2024 வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரில் ககதஸ்புரா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் எங்கள் மகன் வீட்டில் இந்தப் பிரம்ம கமலம் பூத்ததைப் படமெடுத்து whatsappல் பகிர்ந்து இருந்தனர் மருமகளும், மகனும்.

ஒரு மாதத்திற்கு முன் நான் அங்கு போயிருந்த போது இந்தச் செடியைக் காட்டினர். ஆனால் எனக்கு அதன் முக்கியத்துவம் அப்போது தெரியவில்லை.

28.06.2024 பூத்த ஒரு பூவையும்.. 29.06.2024 அன்று பூத்த 6 பிரம்ம கமலங்களையும் அவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பிய போது தான் அதன் அபூர்வத் தன்மை எனக்கு விளங்கியது.

கொசு அதிகமாக இருக்கிறது என்று கதவு மற்றும் ஜன்னல் கதவுகளைச் சார்த்தி வைத்திருக்கிறார்கள்.‌ 
இரவு 8 மணி வாக்கில் குபீரென ஒரு இனிய நறுமணம் சாத்தியிருந்த கதவுகளையும் தாண்டி பரவிய போது தான் அவசர அவசரமாகக் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். 

இந்த அழகான அபூர்வமான மலர் அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்துள்ளது.
மிகவும் மகிழ்ச்சியாக அதைப் புகைப்படமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதைத்தான் இப்போது பார்க்கிறீர்கள் நண்பர்களே !

இந்த வெண்ணிறம் கொண்ட மலரானது, மூன்றுவிதமான இதழ்களைக் கொண்டு அழகாக இருக்கும். 
பாரதத்தைப் பொறுத்தவரை  இமயமலைப் (இந்தியா, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான் மற்றும் தென்மேற்கு சீனா) பகுதிகளில் மலைகளின் இண்டு இடுக்குகளில் மலர்வதாகத் தாவரவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இது உத்தரகாண்டின் அதிகாரப்பூர்வ மாநில மலர் ஆகும்.

இத்தாவரம் தென் அமெரிக்காவின், மெக்சிக்கோ காடுகளைக் பிறப்பிடமாக கொண்டது. அங்கிருந்து இது உலகமெங்கும் பரவியுள்ளது. Princess of Night என்றும் Queen of Night என்றும் அங்கெல்லாம் அழைக்கப்படும் இது பரவிய இடங்களில் இதைச்சுற்றி உள்ளூர் தொன்மங்களும் முளைத்துள்ளன என்றும் சொல்கின்றனர். 
ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் பெத்லகேமின் நட்சத்திரம் என்று இது அறியப்படுகிறது. ஏசு பிறந்தபோது அவரைக் காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக இதை அவர்கள் பார்க்கின்றனர்.

இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்று அறியப்படுகிறது. புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகில் பூவாக வருவதாக அவர்கள் கருதுகின்றனர். 

இது தமிழ்நாட்டிலும் பரவலாக வளர்கிறது. ஹோசூர், கிருஷ்ணகிரி, தேனி, திருப்பத்தூர் சென்னையில் சில பகுதிகளில் இதைப் பலர் வீடுகளில் வளர்க்கிறார்கள்.

இந்து பாரம்பரியத்தில் சிவபெருமானை வழிபடும் ஒரு மங்கள மலராக இது கருதப்படுகிறது.

தன்னைப் பார்வதியைப் பார்க்க விடாமல் தடுத்த விநாயகரின் தலையைச் சிவபெருமான் வெட்டி விடுகிறார்.பின்னர் பார்வதி மிகவும் வேதனைப்படும் போது விநாயகரின் உடலுக்கு யானைத் தலை ஒன்றைப் பொருத்துகிறார். அந்தத் தலையும் உடலும் ஒட்டிக் கொள்ள வேணுமே ? 
அப்போது பிரம்ம தேவன் இந்தப் பூவைப் பிழிந்து அமிர்தம் போன்ற சாறெடுத்து.. அதைப் பயன்படுத்தி யானைத் தலையை விநாயகரின் உடலில் பொருத்தினார் என்று ஒரு புராணக் கதையும் சொல்கிறார்கள்.
அதேபோல் இராமாயணத்தில் சஞ்சீவினி மூலிகையின் உதவியுடன் லட்சுமணன் உயிர் பெற்ற போது தேவர்கள் மகிழ்ச்சியில் வானத்திலிருந்து பிரம்ம கமலப் பூக்களை பொழிந்ததாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக இந்தப் பூ பூமியில் விழுந்து பள்ளத்தாக்கில் வேரூன்றியது என்றும் கூறப்படுகிறது.

கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் துங்கநாத் ஆகிய புனிதக் கோயில்களில் சிவபெருமானை வழிபட இந்த மலர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த பிரம்ம கமலம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது
குறிப்பாக, கல்லீரலில் ஏற்படும் தீங்கு விளைவுகளைக் குறைக்கவும், பாலியல் சம்பந்தமான ஆரோக்கியத்தை பேணி காக்கவும், காய்ச்சலுக்கு சிகிச்சை தரவும், காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தவும், நரம்புக் கோளாறுகளைக் குணப்படுத்தவும், மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்யவும், தோல் பிரச்னைகளை சரி செய்யவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் இந்த பிரம்ம கமலம் பூ பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இப்படிப் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமின்றி.. சூப்கள் மற்றும் பழச்சாறுகள் போன்ற சில உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

இறைவன் படைப்பில் எத்தனை எத்தனையோ அற்புதங்கள் !கற்றது கை மண் அளவு என்பது உண்மை என்று நிரூபிப்பது போல் நாம் இன்னும் அறியாத பலப்பல அபூர்வமான விஷயங்கள் உலகத்திலும் அண்டத்திலும் பரவிக் கிடக்கின்றன இல்லையா நண்பர்களே ?
முடிந்தவரை நல்ல விஷயங்களைத் தேடித்தேடிப் படிப்போம்.. பகிர்வோம் !
நலமே விழைவு : நலமே விளைவு !