Thursday, 16 July 2020

மகப்பேறு மருந்து...பிள்ளை பெற்ற தாய் பின்பற்ற வேண்டிய முறைகள்.. குழந்தைக்கான நெறிமுறைகள்.

            மகப்பேறு மருந்து

      ஒவ்வொன்றும் 10 கிராம் 

 

  1.        மஞ்சள்

  2.        சுக்கு -         

  3.        மிளகு-  50 கிராம்         

  4.        ஓமம்-

  5.        நறுக்குமூலம்   

  6.        அக்கரா        

  7.        சித்தரத்தை           

  8.       திப்பிலி        

  9.        சீரகம்          

10.        பெருஞ்சீரகம்          

11.        கருஞ்சீரகம்    

12.        அதிமதுரம்     

13.        சாரணவேர்           

14.        காயம்

15.        வால்மிளகு

16.        கிராம்பு                                

17.        வாய்விளங்கம்  

18.        சனிஞாயிறு

19.        ஆனைக்கொம்பு

20.        அதிவிடங்கம்   

21.       சதகுப்பை

22.        கிராணி ஓமம்                 

23.        குறுந்தட்டி வேர்

24.        நெல்லிமுள்ளி

25.      விஷ்ணு கிரந்தி

 26.        சீந்தில் கொடி

27.        கடுக்காய்

28.        ஏலம்

29.        பப்படப்புல்லு - கொஞ்சம்

30.    வெள்ளை மிளகு 

      மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் வாங்கி நன்கு சுத்தம் செய்து, பெரிய வேராகவோ அல்லது தடிமனான வேராகவோ இருந்தால் நன்கு தட்டி, வெறும் வாணலியில் தனித்தனியாக இளம் சூட்டில் (simல்) நன்றாகச் சூடாகும் வரை வறுக்கவும். அதன்பின் எல்லாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்து மிஷனில் கொடுத்து அரைத்து வாங்கி நன்றாக ஆறவைத்து, ஈரமோ, காற்றோ புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். கை படாமல் பத்திரமாக வைத்துக்கொண்டால் வருடக் கணக்காக இருக்கும்.

     மகப்பேறு லேகியம்   செய்யும் முறை  

 

தயார் செய்து வைத்துள்ள பொடி - 1 பங்கு

பனைவெல்லம் - 1 பங்கு

நல்ல இஞ்சி - 1\2 பங்கு

தேன் - 1\4 கிலோ

நெய் 1\2 - கிலோ

 

1.இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய்விட்டு நன்கு வதக்கவும்.

 2.பனைவெல்லத்தைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து இளக்கி  வடிகட்டவும்.

3.இஞ்சி ஆறியபின் மிக்ஸியிலிட்டு பனைவெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு அரைக்கவும்.

4.ஒரு அகலமான அடிகனமானப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமுள்ள பனைவெல்லப்பாகை ஊற்றவும். பின்னர் மருந்துப்பொடி, இஞ்சி விழுது ஆகியவற்றைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கட்டியின்றி கிளறவும்.

5.நன்கு திரண்டு வந்ததும் - அல்வா பதம் - மீதமுள்ள நெய் மற்றும் தேன் சேர்த்து இறக்கவும்.

6.நன்கு ஆறியபின் எவர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

     தயவுசெய்து பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டாம்.

7.காலை மற்றும் இரவு 2 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டுவர உடல் கட்டுப்பாட்டில் இருக்கும்; தாய்ப்பால் பெருகும்; கர்ப்பப்பை சுருங்கும். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஏற்படும் மாத விலக்கில் எந்தத் தொந்தரவும் நிச்சயம் வராது.

       திருநெல்வேலிப் பக்கம் பேறுகாலத்தின்போது இந்த மருந்தைப் பயன்படுத்துவர். 

            இதே பொடியைச் சாதாரணமாக நாம் பயன்படுத்தும்போது நமக்கும் நல்ல மருந்து. அலைச்சலினாலோ அல்லது அதிக வேலை பளுவினாலோ ஏற்படும் அதீதமான உடல் வலி ஏற்படும்போது தேவையான அளவு பனைவெல்லத்தை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் போட்டு சில நிமிடங்கள்  கொதிக்க வைத்து, சற்று ஆறியதும் வடி கட்டாமல், அப்படியே குடிக்க உடல்வலி போயே போய்விடும். குழந்தைகளுக்கும் அளவைக் குறைத்துக் கொடுக்கலாம். சிறிதும் பயம் வேண்டாம். பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ கிடையாது. சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்; அதற்கும் பயம் வேண்டாம். வயிறு சுத்தமாகிவிடும். அளவுக்கு அதிகமாகப் போனால் மட்டும் அதை நிறுத்த முயலுங்கள்.

       

      ஒருநாள் விட்டு ஒருநாள் தாய் சிறிது சீரகம் நாலைந்து மிளகு சேர்த்துச் சூடேற்றிய நல்லெண்ணெயைத் தலைமுதல் கால்வரை நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். 

      குளித்த பின் கட்டாயம் சாம்பிராணிப் புகை போட்டுக் கொள்ள வேண்டும்.

       பதினாறு நாட்கள் கட்டாயம் இவற்றை எல்லாம் பின்பற்ற வேண்டும்.

       

        ×××××××+++++++×××××

 

          மகப்பேறு ஆனதும் பின்பற்றப்பட வேண்டிய முறைகள்

       தாய் சாப்பிட வேண்டிய உணவுகளும்.. முறைகளும்:

   காலை : எழுந்தவுடன் பால் அல்லது காஃபியுடன் 2 - 3 ரொட்டித் துண்டுகள்.

    08 - 08.30 -   3 இட்லி 

தொட்டுக்கொள்ள : மிளகுப்பொடி 

   செய்முறை -

மிளகு - 1 பங்கு

உளுந்தம் பருப்பு - 2 பங்கு

கறிவேப்பிலை - 2 பங்கு

பூண்டு - 2- 3 பற்கள்

உப்பு - தேவையான அளவு.


ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வறுத்து நன்கு பொடித்து எவர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

  இட்லியுடன் இந்தப் பொடியை நல்லெண்ணெய் அல்லது நெய் நிறைய சேர்த்துச் சாப்பிடவும்.

தேவைப்பட்டால் இட்லி சாப்பிட்ட பின் பால் (சின்ன டம்ளர்) குடிக்கலாம்.

சாப்பிட்ட பின் 2 - 4 வெற்றிலை களிப்பாக்குப் பொடியுடன் சுண்ணாம்பு சேர்த்துக் கட்டாயம் போட வேண்டும்.


மதியம் -12.30 - 01.00 


குழைய வேக வைத்த புழுங்கல் அரிசி சாதம் - 1 கப்

பத்தியக் குழம்பு :

    குழம்புக் கரண்டிக்கு ஒரு கரண்டி மிளகு

சீரகம் - 2 tb.sp.

கருவேப்பிலை - 1 கொத்து

புளி - 1சின்ன எலுமிச்சை அளவு

மேலே சொன்னவற்றை ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அடுப்பை மிதமாக வைத்து நன்கு வறுக்கவும்.

ஆறியதும் நன்கு விழுதாக அரைக்கவும்.

சின்ன வெங்காயம் கொஞ்சம் மற்றும் பூண்டு நிறைய - இவற்றை நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். உப்பும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி ஆறவைத்து எவர்சில்வர் டப்பாவில் வைக்கவும்.

கைபடாமல் வைத்துக் கொள்ள வேண்டும். 3- 4நாட்கள் வைத்துக் கொள்ளலாம்.

தொடுகாய் - பிஞ்சான கத்தரிக்காய்.. அவரைக்காய் மற்றும் புடலங்காய் பொரியல் அல்லது பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு : இவற்றை மட்டுமே 16 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.

தேங்காய் சேர்க்கக்கூடாது.


துவையல் : பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்து இரண்டு பற்கள் பூண்டு.. உப்பு.. விதைகள் நீக்கிய வரமிளகாய் ஒரு சின்னத்துண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.

(பச்சைமிளகாய் கூடாது)


பத்திய ரசம் : ஒரு சின்ன எலுமிச்சை அளவு புளியை சற்றே சூடேற்றி விட்டு ஒரு ஸ்பூன் மிளகு.. ஒரு ஸ்பூன் சீரகம்.. அரை ஸ்பூன் கொத்தமல்லி விதை - இவற்றுடன் நன்கு அரைத்துக் கொதிக்க விட்டு இறக்கி நெய்யில் கடுகு மட்டும் தாளிக்கவும்.


சாப்பிட்ட பின் 10 - 15 வெற்றிலைக் கட்டாயம் போட வேண்டும்.

நிறையத் தண்ணீர் குடிக்கக் கூடாது.

அதற்குப் பதில் தான் வெற்றிலை.

வெற்றிலை - ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

களிப்பாக்கு - வயிற்றுக் கழிவுகளை நீக்கும்.

சுண்ணாம்பு - பேறு காலத்தில் இழந்த இரத்தத்தை ஈடு செய்யும்.


மாலை 4-4.30 பால் அல்லது காஃபியுடன் 2-3 ரொட்டித் துண்டுகள்.   

    இரவு 07.30-08 மணிக்கு.

  3- 4 இட்லியுடன் இட்லிப் பொடி அல்லது பாசிப்பருப்புத் துவையல்.

சிறிது நேரம் கழித்து ஒரு கப் பால்.

 படுக்கும் முன் 5-7 வெற்றிலை போட வேண்டும்.

               +++++++++++++


பொதுவாகப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.


தாய்.. குழந்தை இருவருக்கும் குளித்த பின் சாம்பிராணிப் புகை போட வேண்டும்.


     குழந்தைக்கு நாள்தோறும் காலையில் தேங்காய் எண்ணையை லேசாகச் சூடேற்றி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தளதளவென்று தேய்த்துக் காலை இளவெயிலில் காட்ட வேண்டும்.

         காலை 10.30 - 11 மணியளவில் வெந்நீரில் குழந்தையை இளஞ்சூடு ஏற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் தேய்த்து…நன்கு கைகால்..விரல்கள்.. முதுகு… தொடைகள் என்று நீவி விட்டு சுத்தமான கடலமாவு தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.

குளிக்க வைத்தபின் இரண்டு காதுகளையும் ஊதிவிட வேண்டும்.

       சாம்பிராணி போட்டு முடித்ததும் கீழே குறிப்பிட்டுள்ள மூலிகை மருந்துகளை உரை மருந்தைக் கொடுக்க வேண்டும்.

  1. வசம்பு ( இதைப் பேர் சொல்லாதது அல்லது பிள்ளை வளர்த்தி என்றும் கூறுவர்.)  இதை நல்லெண்ணெய் விளக்கேற்றி அதில் நன்கு கருகச் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. சுக்கு - இதையும் வசம்பு போல் சுட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

  3. ஜாதிக்காய்

  4. மாசிக்காய் - இவை இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டுச் சோறு நன்றாகக் கொதித்துக் கொண்டு இருக்கும் போது அதில் போட்டு ஒரு பத்து நிமிடம் சூடேற்றி.. பின் சுத்தமான தண்ணீரில் கழுவித் துடைத்து வைத்துக் கொள்ளவும்.

  5. மிளகு - ஒரு மிளகை தையல் ஊசியில் குத்தி தணலில் காட்டிச் சுட்டு வைத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் ஒரு சுத்தமான எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

       தாய்ப்பால் சில சொட்டுகள் பீய்ச்சி எடுத்து சுத்தமான உரைகல்லில் இவை அனைத்தையும் தாய்ப்பால் தொட்டு ஒவ்வொரு இழுப்பு இழுத்து (அதாவது உரத்து)க் குழந்தைக்குப் போட்ட வேண்டும்.

      உரைத்த பின் ஒவ்வொரு முறையும் அந்தப் பொருட்களை நன்றாகச் சுத்தமான தண்ணீரில் கழுவி… சுத்தமான வெள்ளைத் துணியில் துடைத்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு : 

          குழந்தையைக் குளிப்பாட்ட வசம்பைப் பேருக்கு உரைத்தாற் போல்தான் உரைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம் .

     இந்த உரைமருந்து குழந்தையின் உடல் முழுவதையும் சீராக வைத்துக் கொள்ள உதவும்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்.

    குழந்தையைக் குளிக்க எடுத்துச் செல்லும் முன் இரண்டு அல்லது மூன்று உலர்திராட்சையை வெந்நீரில் ஊற வைத்துவிட்டுச் செல்லவும்.

     உரைமருந்தைக் கொடுத்த பின் ஊறிய திராட்சையை நன்கு கசக்கி சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டி குழந்தைக்குப் போட்டிவிட வேண்டும்.

      இது குழந்தையின் வயிற்றையும் சுத்தப்படுத்தி விடும்..நெஞ்சுச் சளி கட்ட விடாது.


    தாய் புளிப்பு அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடக்கூடாது. அதனால் தான் புளியை வெறும் வாணலியில் நன்கு சூடேற்றிப் பயன்படுத்துகிறோம்.

      ஆனால் எங்கள் வீடுகளில் அவரவர் வழக்கப்படி என்னவெல்லாம் சாப்பிடுகிறோமோ அவை அனைத்தையும்… மாம்பழம்.. பலாப்பழம் உட்பட அனைத்தையும் சிறிது சிறிது ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்றாய் உணவோடு சேர்த்துக் கொடுத்து விடுவார்கள்.

     ஏனெனில் பின்னாளில் பிள்ளையின் வயிற்றுக்கு எல்லாம் ஒத்துக் கொள்ளும்.


     தாய்ப்பால் கொடுக்கும் முன் மார்பகங்களைப் பிதுக்கிக் கட்டுப்பாலைப் பீச்சி எடுத்து விட வேண்டும்.

      பால் கொடுக்கும் முன் சுத்தமான வெள்ளைத் துணியால் மார்பகங்களை நன்கு அழுத்தித் துடைத்து விட வேண்டும். 

     கட்டாயம் இரண்டு பக்கமும் பாலூட்ட வேண்டும்.

     தாய் படுத்துக்கொண்டு ஒருபோதும் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது.

பிள்ளைக்குப் புரையேற வாய்ப்புகள் அதிகம்.

      

     எவ்வளவுக்கு எவ்வளவு தாயும் சேயும் சுத்தமாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எந்த நோயும் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.


     எப்பொழுதேனும் தாய் குளிருவது போல் உணர்ந்தால் பத்து மிளகைப் பனைவெல்லம் சேர்த்து நன்கு பொடித்து வாயிலிட்டு மெதுவாக அந்தச் சாற்றை இறக்கவும்.

     

  நல்வாழ்த்துக்கள் பிள்ளைகளா !





 

 


No comments:

Post a Comment