வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
தவணை முறையும்… தத்தளிப்பும் !
சமீப காலங்களில் நான் அவதானித்து வரும் ஒரு விஷயம் மக்களிடையே சேமிப்புப் பழக்கம் குறைந்து வருவது.. அல்லது அறவே இல்லாதது.
" பத்து ரூபாய் சம்பாரிச்சாலும்.. பத்துப் பைசா சேமிக்கணும் " ! இது எங்கள் கிராமத்துப் பாட்டி அடிக்கடி சொல்வது.
" இல்லே இல்லேன்னு கையில கொஞ்சம் வச்சிருக்கணும்.." இது எங்க பெரியக்கா எப்போதும் சொல்வது.
அப்போது அறியா வயது. ஒன்றும் புரியவில்லை.
ஆனால் திருமணமாகி வாழ்க்கையை என் கணவரின் மிகவும் குறைவான சம்பளத்தில் தொடங்கிய போது மெல்லமெல்ல மெல்லமெல்லப் புரியத் தொடங்கியது சேமிப்பின் அருமை.
அதன்பின் சிறுகச்சிறுக சேமிக்கத் தொடங்கினேன்.
அப்போதெல்லாம் அதாவது 1970 களின் மத்தியில் 1பைசா..2 பைசா..3 பைசா மற்றும்5..10 பைசா நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அவைகளை அப்படியே ஒரு பக்கமாகப் போட்டு வைப்பது.. அன்றாடம் காய்கறி வாங்குவதில் மீதம் ஆகும் சில்லறைகளை தனியே வைத்துவிடுவது..என்று.
வங்கியில் அல்லது அஞ்சலகத்தில் சேமிக்கும் அளவுக்கு வசதி கிடையாது.
ஆனால் நான் மேற்சொன்ன முறைகளில் சேமித்தவை அவசரத்துக்கு நன்கு உதவும்.
அதைத் தவிரவும் மீதமாகிறதை வைத்து எத்தனை எத்தனையோ நன்கு படிக்கும் பணவசதி இல்லாத பிள்ளைகளைப் படிக்க வைத்தோம்.
அந்த மாதிரி மக்களுக்கு ஒரு மருத்துவ செலவு.. அவசரச் செலவு என்றால் எங்களால் தயக்கமின்றி உதவ முடிந்தது நண்பர்களே !
இன்றும் அப்படி ₹.5 ,₹.10 இவற்றை ஓரிடத்தில் தனியே போட்டு வைப்பேன். இன்றும் அவை பணவசதி இல்லாதவர்கள் வந்து உதவி கேட்கும் போது…
" இல்லை " என்று சொல்லாமல் உதவ வழிவகுக்கிறது.
எவ்வளவு பணம் கையில் இருந்தாலும் செலவுதான் ஆகும்.
தற்காலத்தில் அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் எத்தனை எத்தனையோ வகைகளில் சேமிக்க முடியும். பிள்ளைகள் படிப்பு.. திருமணம்.. மருத்துவக் காப்பீடு.. வயதான காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் நமது வாழ்வை நடத்த - இப்படி எப்படி வேண்டுமானாலும் சேமிக்கலாம். நாம் கொஞ்சம் முயல வேண்டும்.. அவ்வளவுதான் !
அஞ்சலகங்களில் இப்போது நிறையத் திட்டங்கள் இருக்கின்றன.
இது இல்லாமல் Franklin Templeton போன்ற தனியார் வங்கிகளில் Systematic Investment Plan (SIP) அதாவது தொடர் வைப்பு சேமிப்பு (Recurring Deposit என்று பொதுவாகச் சொல்வது) என்ற முறையில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தலாம் : அன்றி மொத்தமாக ஒரே தவணையில் செலுத்தலாம்.
முன்பெல்லாம் Provident Fund என்பது தொழிற்சாலை ஊழியர்களுக்கு மட்டுமே முடிந்தது. ஆனால் இப்போதோ Public Provident Fund இருக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் இதில் சேமிக்கலாம்.
இப்படி பல வழிமுறைகள் இருக்கின்றன.
இது தொடர்பாக நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒரு முக்கியமான விஷயம் - கூடுமானவரைத் தவணை முறையில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள் !
இன்று நிறையப்பலர் செய்யும் மிகப்பெரிய தப்பு…தவணையில் கிடைக்கிறது என்பதற்காகத் தேவையில்லாதவைகளைக் கூட வாங்கிக் குவிப்பது.
தேவையில்லாதவைகளை போலி கௌரவத்திற்காகவோ அல்லது "அடுத்தவர் வைத்திருக்கிறார்..நாமும் வாங்குவோம்.." என்றோ வாங்குவது துளியும் யோசிக்காமல்.
இறுதியில் ஒவ்வொன்றாக 'இவ்வளவுதானே.. இவ்வளவுதானே ' என்று வாங்கி விட்டு மாத முதல்வாரத்தில் ஊதியம் வாங்கும்போது..(வாங்கிய பொருட்களுக்கெல்லாம் ஊதியத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருப்பார்கள்) வாடகை..மளிகை.. பால் பிள்ளைகளின் படிப்புச் செலவுகள்.. எதிர்பாராமல் ஏற்படும் செலவுகள் - இப்படி கட்டாயம் கொடுக்க வேண்டிய செலவுகளுக்குக் கூடக் கையைப் பிசையும் நிலையில் வந்து நிற்போரை நான் நிறையப் பார்த்திருக்கிறேன்.
On Savings :
Don't save what is left after spending , but spend what is left after Saving.
மேலே உள்ளது திரு.வாரன் பபெஃட் (Warren Buffet) சில ஆண்டுகளுக்கு முன் சொன்னவை... அமெரிக்க தொழில் முதலீட்டாளர் சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது.
பங்கச் சந்தை உலகத் தந்தை என்று அழைக்கப்படும் இவர் மேற்கொண்டு சொன்னதையும் இங்கே பாருங்கள் பிள்ளைகளா!
Never depend on Single income. Make investment to create a Second source.
On Spending :
If you buy things you don't need, soon you will have to sell the things you need
On Savings :
Don't save what is left after spending , but spend what is left after Saving.
On Taking Risk :
Never test the depth of river with both feet.
On Investment :
Don't put all eggs in one basket.
On Expectations :
Honesty is very Expensive Gift.
Don't expect it from cheap people.
எனக்கு இதில் எதுவும் புதிதாகத் தோன்றவில்லை. ஏனெனில் இவை எங்களுக்கு எங்கள் வீட்டில் அடிப்படைப் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டவை...
நாங்கள் சொன்னால் கேட்க மாட்டீர்கள்... இந்த அமெரிக்காக்காரர் சொல்வதையாவது மனதில் பதிய வையுங்கள் இளைஞர்களே !
" கல்கண்டு " என்ற தமிழ் வார இதழின் ஆசிரியர் காலஞ்சென்ற திரு.தமிழ்வாணன் (லேனா தமிழ்வாணன் அவர்களின் அப்பா ) அவர்களும் அந்தக் காலத்திலேயே இவற்றை வலியுறுத்துவார்.
நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !
நல்வாழ்த்துக்கள் இளம் பிள்ளைகளே !
வாழிய பாரத மணித்திருநாடு !